Friday, April 1, 2011

ஆதிசங்கரர்

 இந்து சமயம் என்ற பெயரில் நாம் அனுசரித்து  வரும் சமயம் எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. இந்து சமயத்திற்கு ஆதாரமாக விளங்குபவை நான்கு வேதங்கள்.     வேதங்களின் அடிப்படையில் பல சாஸ்திரங்கள் ஏற்பட்டன.அவற்றையெல்லாம் பதினெட்டு வித்யா ஸ்தானங்கள் என்று கூறுவார்கள்.   

    இவை தவிர மேலும் சில சாஸ்திரங்கள் இருந்தன. இவைதாம் தந்திரங்களும் ஆகமங்களும்.

        வேதசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்த சமயத்தை வைதீக சமயம் என்றும் சனாதனதர்மம் என்றும் கூறுவார்கள். பல ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், அறிஞர்கள் முதலியவர்களின் கூட்டு முயற்சியால் பல நூற்றாண்டுகளில் அது வளர்ச்சியுற்றது.     அவ்வப்போது புத்துணர்ச்சி ஊட்டப் பெற்றும், புத்துயிர் பெற்றும், மாற்றப்பட்டும், சீரமைக்கப்பட்டும் வந்ததுதான் இன்று நாம் காணும் இந்து சமயம். 


ஆதிசங்கரர்
    
    இந்து சமயத்தைச் சீரமைப்புச் செய்தவர்களில் முதன்மையானவர் ஆதிசங்கரர்.
    
    அவருடைய காலத்திற்குச் சற்றுமுன் வைதீக சமயம் அழிந்துபோகும் நிலையை எய்தியது. புறச்சமயங்களின் தாக்குதல் இருந்தது. இந்தியாவ்¢ல் வழங்கிய சமயங்களில் எழுபத்திரண்டு வகையான உட்பிரிவுகள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மையான பிரிவுகள் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிப்பவையாக விளங்கின.

        அந்தந்தப் பிரிவுகளின் தலைவர்களை ஆதிசங்கரர் விவாதத்திற்கு அழைத்து அவர்களை வென்றார். சமுதாயத்திற்குப் புறம்பாகத் திகழ்ந்த பல பிரிவுகளை முற்றிலுமாக அழித்தார். 
    வேறு பல பிரிவுகளிலிருந்த நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டார்.

    வேதங்களின் அடிப்படையில் ஆறுமுக்கியமான இந்து சமய உட்பிரிவுகளை ஏற்படுத்தினார்.
    
    அவற்றுள் மேலும் பல நல்ல அம்சங்களைப் புகுத்தினார். அவை அனைத்திற்கும் பொதுவான சில மரபுகளையும் ஏற்படுத்தி வைத்தார்.
    
    உபநிஷ வேதாந்தத்திற்கும்  பகவத்கீதைக்கும் விளக்கவுரை எழுதினார். அத்வைதத் தத்துவத்தைத் தெளிவு படுத்தினார்.
    
    பல தெய்வங்களின் பெயரால் மிக அழகிய தோத்திரப் பாடல்களை இயற்றினார். இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்தது அம்பிகையின் பெயரால் பாடப்பட்ட சௌந்தர்ய லஹரி.

    முப்பத்திரண்டு வயதிற்குள் பல சாதனைகளைப் புரிந்துவிட்டு சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார். சகல கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர்கள் வீற்றிருக்கும் பீடமே சர்வக்ஞ பீடம்.
    
    அவருடைய பேரறிவு, ஞானம், செல்வாக்கு முதலியவற்றால் நிலைநிறுத்திய ஆறு உட்சமயங்களையும் ஷண்மதங்கள் என்று கூறுவார்கள். ஆகவே ஆதி சங்கரருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சாரியார் என்று பெயர் ஏற்பட்டது.
    
    அந்த ஆறு சமயங்களையும் சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் என்று பெயரிட்டார்.     அவை முறையே சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், முருகன், கணபதி ஆகிய தெய்வங்களை மூலமூர்த்திகளாகக் கொண்டவை.

        அந்த ஆறு உட்சமங்களையும் உள்ளடக்கிய கலவைதான் இன்றைய இந்து சமயம். இதைத்தான் இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் காஞ்சிப் பெரியவர்களும் வளர்த்தனர்.   

    அந்த ஆறு உட்சமயங்களில் ஒன்று சாக்தம். சக்தியைப் பல உருவங்களில் பலவிதமாக வழிபடுவதே இந்த சமயம் காட்டும் நெறி. ஆனால் சக்தி வழிபாடு மிக மிகப் பழமையானது. ஒரு காலத்தில் உலகெங்கும் பரவியிருந்தது.

ஸ்ரீவித்யா எனப்படும் சக்தி வழிபாடு   

    இதன் மிக முக்கிய அங்கம் ஸ்ரீவித்யா மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஜகத்ஜனனியாகிய அம்பிகையைத் திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம், ஸ்ரீலலிதா, காமாட்சி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி என்ற பெயர்களில் திரிபுரசுந்தரியை வணங்குகிறோம். 

        இந்தப் பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன. அவளுக்கு மிகமிகப் பிரியமான பெயரால் அவளை அழைப்பதேகூட ஒரு வழிதான். 
    அம்மா, மா, ஆயி, ஆத்தாள் என்னும் பெயர்களே அவை.     அதே பொருள்கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம்.- 
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ.

   
    அம்பிகையை வழிபடுவதற்குப் பல முறைகள் இருக்கின்றன. எளிமையான தோத்திரங்களால் வழிபடலாம்; அவளுக்குரிய நாம மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம்; அவளுடைய மந்திரத்தை ஜபம் செய்யலாம்; பூ, பழம் போன்றவற்றை வைத்துப் பூஜை செய்யலாம்; ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம்; அவளுடைய தன்மையை மனத்தில் இருத்தி தியானிக்கலாம். அல்லது சிக்கலான சடங்குகளுடன் ஹோமம், யாகம் போன்றவற்றையும் செய்யலாம்.

மந்திரங்கள்
   
    சடங்கு பூர்வமான வழிபாட்டிலும், உபயவழிபாட்டிலும் பல மந்திரங்களைப் பயன்படுத்துகிறோம்.
   
    சிறப்பும் சக்தியும் வாய்ந்த ஒரு குறிப்பிட்ட ஒலியையோ அல்லது அந்த மாதிரியான ஒலிகளின் கூட்டமைப்பையோ ‘மந்திரம்’ என்று கூறுகிறோம்.
   
    “நிறைமொழி மாந்தர்” என்றழைக்கப்படும் ஆற்றல் வாய்ந்த ரிஷிகளால் வெளியிடப்பட்டவை மந்திரங்கள்.
   
    பல மந்திரங்கள் சொல் வடிவில் அல்லது பெயர் வடிவில் விளங்கும். வாக்கியங்களாகக் கூட விளங்கும். பாடல்களாகவும் திகழும். சில மந்திரங்களோ மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் எந்த அர்த்தத்தையும் கொடுக்கமாட்டாது.
   
    ஏதோ ஒரு வகையான ஓசையாக அது இருக்கும்.

        மந்திரங்கள் அனைத்திற்குமே ரகசிய அர்த்தங்கள் உண்டு. மர்மமானவை அவை.

சஹஸ்ரநாமம்
      
    அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன.
    ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சஹஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம்.
   
    முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சஹஸ்ரநாமம் உண்டு. அம்பிகைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட சஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. லலிதா, புவனேஸ்வரி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, பாலா போன்றவை அவை.

லலிதா சஹஸ்ரநாமம்
   
    அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.  
   
    இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ர நாமம் விளங்குகிறது.

தோன்றிய விதம்

    பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

    அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

ஆயிரம் மந்திரங்கள்   

    இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின் ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

        ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும்.

   
    இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம்.

   
    ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.
   
    ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் செய்யலாம்.
    அல்லது சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட செய்யலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் அந்த மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.
   
    செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் செய்வது சிறப்பு.
   
    வில்வ இலை, துளசிப் பூங்கொத்து, செம்பரத்தம்பூ, நந்தியாவட்டை மல்லிகை, சம்பகம், அரணி முதலிய மலர்கள் சிறப்பு. வேறெந்த மலரையும் வைத்துச் செய்யலாம். சரஸ்வதி பூஜையன்று செய்வதும் நல்லது.
   
    அம்பிகையின் பக்தர்களுக்கு அம்பிகையே ஏதாவது வகையில் குருவாய் வருவாள். வழியையும் காட்டுவாள். அல்லது தகுந்த குருவை அடைய வழி செய்வாள்.

பயன்படுத்தும் விதம்   

    லலிதா சஹஸ்ரநாமத்தை இருவிதமாகப் பயன் படுத்தலாம்.

    ஆயிரம் மந்திரங்களையும் தனித்தனியாக தொடர்ந்து கூறிவரலாம். ஒவ்வொரு மந்திரத்துக்கும் முன்னால் பிரணவத்தைச் சொல்லி மந்திரத்தையும் சொல்லி, பின்னால் நமஹ என்று கூறுகிறோம். இது நாமாவளி சொல்லும் முறை. அர்ச்சனையின்போது இவ்வாறு செய்கிறோம்.  

உதாரணம்:
   
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
   
ஓம் ஸ்ரீ மஹா ராஜ்ஞை நமஹ
   
ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வர்யை நமஹ  

    இன்னொரு முறையில் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் மந்திரங்களையும் வரிசையாக ஒன்றாக இணைத்துக் கூறுகிறோம். ஆயிரம் மந்திரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்து ஒரு பெரிய மந்திரமாக அமைத்துச் சொல்கிறோம். இது ஒரு பெரிய பாடலின் அமைப்பில் விளங்கும். அனுஷ்டுப் சந்தஸ் எனப்படும் தாள அமைப்பில் இது விளங்கும். இந்தப் பாடல் வடிவைத் தோத்திரம் என்று கூறுகிறோம். இந்தத் தோத்திரத்தில் நூற்று எண்பத்து மூன்று சுலோகங்களாக ஆயிரம் மந்திரங்களும் இணைந்திருக்கின்றன. ஆனால் அமைப்பில் இது ஒரே மந்திரந்தான். பல மந்திரங்கள் இணைந்து ஒரு பெரிய மந்திரமாக உருவாகமுடியும். அவ்வாறான இணைப்பால் உருவாகிய பெரிய மந்திரத்தை மாலா மந்திரம் என்று கூறுகிறோம்.
   
    பல மலர்கள் இணைத்துக் கோர்க்கப்பட்டு ஒரு மாலை உருவாவதைப் போலவே இருப்பதால்தான் இதனை மாலா மந்திரம் என்று கூறுகிறார்கள்.

   
    இம்முறையில் இது ‘ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம ஸ்தோத்திர  மாலா மஹா மந்திரம்’ என்று அழைக்கப் படுகிறது.

        இம்முறையில் பாராயணம் செய்யப்படும்போது அதன் முன்னரும் பின்னரும் சொல்லிச் செய்யவேண்டிய சில அம்சங்கள் உள்ளன.
    நியாசம் என்று இவற்றைச் சொல்வார்கள். ஆரம்ப நிலையில் இருந்து படித்து நன்றாகச் செய்து பழக விரும்புகிறவர்கள் நியாசத்தை மெதுவாகக் கற்றுக் கொள்வதுண்டு.     இருப்பினும் நியாசத்துடன் செய்வது இன்னும் சிறப்பு.

மாலா மந்திர அமைப்பு

ஸ்ரீமாதா ஸ்ரீமஹா ராஜ்ஞி ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேஸ்வரீ  

    மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும். மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது.

    ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.
   
    இதன் உரையாசிரியர் பாஸ்கரராயரும் இவற்றுக்கு விளக்கம் தந்திருப்பது பெரும் சிறப்பாகும்.
   
    பிரசாதம் இனிப்பாக இருக்க வேண்டும். பொங்கல், பால் பாயாசம், பால், தேன் முதலியவை நல்லது. இவை கிடைக்காத சமயத்தில் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவற்றுடன் வெறும் தண்ணீரைக் கூட நைவேத்தியமாக வைக்கலாம். புதிதாகச் சமைத்த சாதத்தை யாரும் உண்பதற்கு முன்னதாகக் கூட அம்பிகைக்குப் படைக்கலாம்.
   
    அம்பிகை வழிபாட்டில் அன்பு, எளிமை, ஆர்வம், பக்தி, அடக்கம் ஆகியவையே மிகமிக முக்கியம்.
   
    ஆடம்பரமான பகட்டான ஆரவாரமான பூஜைகளைக் கண்டு அம்பிகை ஏமாறமாட்டாள். லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.

அந்தர் முக சமாராத்யா,
பஹிர்முக சுதுர்லபா

    அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.
   
    பெண்கள் ஸஹஸ்ரநாம பூஜை செய்வதை அம்பிகை மிகவும் அதிகமாக விரும்புவாள்.

ஸ்ரீலலிதாம்பிகையின் அவதாரம்
   
    மன்மதன் அழகுக்கும் காதலுக்கும் உரிய தெய்வம்.     தன்னுடைய நெற்றிக்கண்ணால் அவனை சிவபெருமான் ஒருமுறை எரித்துவிட்டார். மன்மதனின் உடல் சாம்பலாகிவிட்டது.

    சிவபெருமானுடைய கணங்களில் ஒருவனாகிய சித்திரகர்மா
அந்தச் சாம்பல் குவியலை மீண்டும் உருவமாக்கினான் .
    அந்தச் சாம்பல் வடிவின் மீது சிவனுடைய பார்வை விழுந்தது. தம்முடைய ஜயாமுடியின் கற்றைகளை உதறினார். அவற்றிலிருந்து ஜீவாம்ருதத் துளிகள் அந்த சாம்பற் குவியலின்மீது விழுந்தன. உடனே அது உயிர் பெற்றெழுந்தது.
   
    அசுரனாக அந்த உரு விளங்கியது.
    ஸ்ரீருத்ரம் என்னும் மந்திரத்தால் அந்த அசுரன் சிவனை வழிபட்டான்.
    தன்னோடு போரிடும் எதிரியின் பலத்தில் பாதியைத் தான் பெற்றுவிட வேண்டும் என்றும் எதிரியின் ஆயுதங்கள் வலுவிழந்து போகவேண்டும் என்றும் வரம் கேட்டான்.
    அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மட்டுமே பலிக்குமாறு சிவன் வரமளித்தார்.
   
    பிரமனால் அவனுக்கு ‘பண்டாசுரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
    போரினால் அவனை வெல்லமுடியவில்லை. ஆகவே தேவர்களை அடக்கி ஆண்டான்.
    போரிடாத தேவர்களைப் பெரும் யாகங்கள் செய்து வரவழைத்து அவர்களின் ஆற்றலைத் தானே வாங்கிக் கொண்டான். அவர்களைத் தமக்கு ஏவல் புரியச்செய்தான்.

        ஸ்ரீருத்ரம், வேதமந்திரங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி பண்டாசுரனும் அவனைச் சேர்ந்த மற்ற அசுரர்களும் ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டனர்.
    பலம் மிகுந்த விஷங்கன், விசுக்ரன் ஆகியோர் அவனுடைய புஜங்களிலிருந்து தோன்றி அவனுடைய தம்பியராக விளங்கினர். மேலும் முப்பத்திரண்டு மகன்களையும் உருவாக்கிக் கொண்டான். இன்னும் கோடிக்கணக்கான பல அசுரர்களையும் உண்டாக்கிக் கொண்டான்.
    சூன்யகம் என்னும் தலைநகரத்தையும் ஏற்படுத்தி அங்கு இருந்து கொண்டு தேவர்களை அடக்கியாண்டான்.

    தேவர்கள் கூடி ஆலோசனை செய்தபோது அம்பிகையை வழிபட்டு அவளிடம் வேண்டி, பண்டாசுரனை அழிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

    தேவர்கள் தங்களுடைய உள்ளத்திலும் ஆன்மாவிலும் சம்பந்தப்பட்ட ‘சித்’ என்னும் அறிவுமயமான அக்னிகுண்டத்தை அமைத்துத் தங்களின் உடலையே போட்டு ஹோமம் செய்தார்கள்.        
    தேவி லலிதாவாக அம்பிகை தோன்றினாள். மகா திரிபுர சுந்தரியாகிய அவளைக் காமேசுவரர் என்னும் வடிவில் சிவன் மணந்து கொண்டார்.
    தனக்குரிய ஸ்ரீபுரம் என்னும் இடத்தில் சிந்தாமணி கிரகம் என்னும் அரண்மனையில் சிங்காசனத்தின் மீது வீற்றிருந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாள்.
   
    ஸ்ரீலலிதாதான் சகல பிரபஞ்சங்களுக்கும் தாய். ஜகத் ஜனனி எனப்படுகிறாள். மஹாதிரிபுரசுந்தரி, திரிபுரை, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி என்றெல்லாம் அவளுக்குப் பெயர்களுண்டு. பாசம், அங்குசம், கரும்பு, ஐந்துவகையான மலர் அம்புகள் இவற்றைக் கரங்களில் தாங்கியிருப்பாள். மூன்று கண்களுடன் முடியில் மீது பிறைச் சந்திரனையும் அணிந்திருப்பாள். பேரழகி. மஹாமாயையாக விளங்கும் அவள் மோஹினியாகவும் விளங்குகிறாள். ஆயிரம் உதய சூரியர்களின் காந்தியுடையவள். தன்னுடைய செந்நிறத்தால் இந்த புவனங்கள் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்பவள்.  காரணமில்லாமலேயே கருணைகாட்டுபவள். இவள்தான் காஞ்சியில் காமாட்சியாக வீற்றிருக்கிறாள்.
   
    பண்டாசுரனுக்குக் கிடைத்த வரத்தின்படி அவனுடைய எதிரியின் பலத்தில் பாதி அவனுக்குச் சேர்ந்துவிட வேண்டும். அவ்வாறு கிடைத்த பாதி பலத்துடன் பண்டாசுரனுடைய சொந்த பலமும் சேர்ந்து கொள்ளும். அளவுள்ள சக்தி படைத்தவர்களுடைய ஆற்றலைத்தான் அவ்வாறு பிரிக்கமுடியும். ஆனால் அம்பிகையோ அளவற்ற சக்தி படைத்தவள். அளவற்ற சக்தியில் பாதியை எப்படிப் பிரிக்க முடியும்? ஆகவேதான் அம்பிகையே பண்டாசுரனை அழிக்கச் சென்றாள்.
   
    மந்திரிணீ, தண்டநாதா, ஜ்வாலா மாலினி, பாலா திரிபுர சுந்தரி, அச்வாரூடா, சம்பத்கரீ ஆகிய முக்கிய சக்திகளுடன் பண்டாசுரனுடன் போருக்குச் சென்றாள்.

    மந்த்ரிணீ என்னும் ராஜசியாமளாதான் ராஜராஜேஸ்வரியின் மந்திரி. மதுரையில் மீனாட்சியாக விளங்குகின்றாள்.
    தண்டநாத அல்லது தண்டினீ என்பவள் அம்பிகையின் சேனாபதி. மஹாவாராஹி விளங்கும் அவள் திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக இருக்கிறாள்.
    ஜ்வாலா மாலினி என்னும் சக்தி நெருப்பால் ஒரு கோட்டையைப் பாதுகாப்புக்காக எழுப்பினாள். ஸ்ரீசக்கரராஜம் என்னும் தேரில் லலிதாவும் கேயசக்கரம் என்னும் தேரில் மந்திரிணியும் கிரிசக்கரத் தேரில் தண்டநாதாவும் அமர்ந்து கொண்டனர்.
   
    திரஸ்கரீணி, நகுலி, நித்யாதேவிகள் முதலிய சக்திகளையும் மேலும் பல சக்தி கணங்களையும் அம்பிகை படைத்துக் கொண்டாள்.
   
    போரில் பண்டாசுரனின் அசுரர்களையும் அவனுக்குத் துணையாக வந்தவர்களையும் அவர்கள் அழித்தனர். பண்டாசுரனின் குமாரர்களை பாலாதிரிபுர சுந்தரி விளையாட்டாகவே அழித்து விட்டாள். அந்த வீரத்தால் அன்னை மகிழ்ந்தாள். பாலாதிரிபுர சுந்தரி, லலிதா தேவியின் மகள் என்று கூறப்படுகிறாள். லலிதா தேவியிடமிருந்து தோன்றிய இன்னொரு பிரதி போன்றவள். லலிதாவைப் பேரரசியாகவும் பாலாவைப் பட்டத்திளவரசியாகவும் கருதுவார்கள். அம்பிகை வழிபாட்டில் பாலாவை வழிபட்டதன் பிறகு லலிதாவை வழிபடுவது வழக்கம். லலிதாவின் வழிபாட்டை ஸ்ரீவித்யை என்றும் பாலாவின் வழிபாட்டை லகு ஸ்ரீவித்யை என்றும் கூறுவார்கள்.
   
    பண்டாசுரனுடைய தம்பியாகிய விஷங்கனை மந்திரிணீ அழித்தாள். மந்திரிணீயை சியாமளா என்றும் ராஜசியாமளா என்றும் கூறுவார்கள். வேத சொருபமான கிளியையும் மாணிக்கவீணையையும் தாங்கியிருப்பாள். இவள்தான் ராஜராஜேஸ்வரியான லலிதாவின் மந்திரியாக விளங்குபவள். லலிதாவின் ராஜ்ய நிர்வாகத்தைக் கவனிக்கும் முத்ரேஸ்வரி அவள்.
   
    ராஜ சியாமளாவே மதுரையில் மீனாட்சியாக விளங்குகிறாள்.
    பண்டாசுரனின் இன்னொரு சகோதரனாகிய விசுக்ரன் தன்னுடைய அசுரமாயையால் ஒரு யந்திரத்தை உருவாக்கினான். விக்னயந்திரம் எனப்படும் அந்த யந்திரத்தை அக்னிக் கோட்டைக்குள் வீசியெறிந்துவிட்டான். அது அங்கு மறைந்து இருந்து செயல்பட்டது.
   
    சோம்பல், செயலின்மை, முடியாது என்ற தாழ்வுணர்ச்சி, தூக்கம், மயக்கம், ஊக்கமின்மை, தன்மானமிழத்தல் போன்ற உணர்ச்சிகளை அந்த யந்திரம் சக்தி சேனையில் ஏற்படுத்தியது. அதனால் சக்திகளின் தரப்பில் யுத்தப் பணிகள் தடைப்பட்டன.

        லலிதா தன்னருகே அமர்ந்திருக்கும் சிவனாகிய காமேசுவரரைப் புன்னகையுடன் நோக்கினாள். அவரும் முறுவலுடன் நோக்கினாள். இருவரது பார்வைகளும் கலந்தவுடன் அங்கு மஹாகணபதி தோன்றினார்.
   
    பத்துக்கரங்களும், மூன்று கண்களும், பிறைச்சந்திரனும் அணிந்து, வல்லபை என்னும் சித்தலட்சுமியைத் தன் மடியின் மீது அமர்த்திய வண்ணம் விளங்கினார்.
   
    மஹாகணேசர் உடனே விக்னயந்திரத்தைக் கண்டுபிடித்துத் தன் கொம்பால் தூளாக்கினார்.
    விக்னயந்திரம் அழிந்ததோடு சக்தி சேனையின் செயலின்மையும் அகன்றது. இதைக் கண்டு லலிதா மகிழ்ச்சியடைந்தாள்.  
   
    விசுக்ரனை தண்டநாதா அழித்தாள். தண்டநாதாவுக்கு வாராஹி, பஞ்சமி என்றெல்லாம் பெயர்களுண்டு. வராஹ முகம்கொண்டு கலப்பையும், உலக்கையும் கரங்களில் வைத்திருப்பாள். லலிதாவின் சேனாதிபதி இவள்தான். இவளே திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாகத் திகழ்கிறாள்.
   
    அம்பிகையுடன் பண்டாசுரன் போர் புரியச் சென்றான்.
போரிட வந்திருப்பவள் அகண்ட பரிபூரண ஆதிபராசக்தி என்பதை
அறிந்துகொண்ட பண்டாசுரன் அன்னைக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அவளைத் துதித்து மூன்று பாணங்களைச் செலுத்தினான். அவை மலர் அம்புகளாக மாறி அன்னையின் பாதங்களில் விழுந்தன.
    பின்னர் பண்டாசுரன் விடுத்த அனைத்து ஆயுதங்களுக்கும் பதில் ஆயுதங்களைப் பொழிந்தாள் லலிதா.
   
    தன்னுடைய குமாரர்கள், தம்பியர், படைகள், பெரும் வீரர்கள் முதலியவர்களை இழந்த பண்டாசுரன் லலிதாவுடன் எஞ்சிநின்ற படைகளுடன் போர்புரிய வந்தான்.
   
    பல ஆயுதங்களையும் இழந்த பண்டாசுரன் தன்னுடைய மாயையால் பல அசுரர்களைத் தோற்றுவித்தான். தன் இருகை விரல் நகங்களைச் சுண்டி, மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் லலிதா தோன்றச் செய்தாள். அந்த அவதாரங்கள் அனைத்து மாயா அசுரர்களையும் அழித்தன.
   
    மஹாபாசுபதம் என்னும் அஸ்திரத்தைச் செலுத்தி பண்டாசுரனுடைய சேனையை அம்பாள் அடியோடு எரித்து அழித்தாள்.
    காமேஸ்வர அஸ்திரத்தைக் கொண்டு பண்டாசுரனையும் எரித்துவிட்டாள்.
   
    இதனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களால் துதிக்கப்பட்ட பெருமை அவளுக்கு ஏற்பட்டது.

        ஆரம்பத்தில் சிவனுடைய நெற்றிக்கண் பார்வையால் எரிக்கப்பட்ட மன்மதனை மீண்டும் உயிர் பெறச் செய்து அவனுக்கு சஞ்சீவினி மூலிகையாகத் திகழ்ந்தாள்.
   
    ஸ்ரீ புரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லாத் தேவதைகளும் சூழ லலிதாதேவி கொலுவிருக்கையில் வஸீனி முதலிய வாக்கு தேவதைகள் லலிதா சஹஸ்ரநாம தோத்திரத்தால் அம்பிகையைத் துதித்தனர்.
   
    “என் கட்டளையாலேயே இந்த ஒப்புயர்வற்ற தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். இதை நீங்கள் எப்போதும் என்னுடைய பிரீதியின் வளர்ச்சிக்காகப் படிப்பதுடன் என் பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த சஹஸ்ரநாமத்தை எனது பிரீதிக்காக எப்போதும் பாராயணம் செய்யவேண்டும்”, என்று ஸ்ரீ மாதாவாகிய  ஸ்ரீலலிதா தேவி
ஆசி கூறினாள்.

2 comments:

  1. miga nandru !!!
    sri lalithaa devi patri therinthukonden !!!!

    deviin matta sakthigal patriyum ,devi mahathmiyam patriyum kooravum

    ReplyDelete
  2. ஒப்புஉயர்விலாத ரநனம் லலிதா சகச்ரநாமத்

    ReplyDelete